மண்டல அளவில் துப்பாக்கி சுடும் போட்டி: ஈரோடு போலீசாருக்கு சாம்பியன் பட்டம்

கோவை: கோவையில் நடந்த மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், ஈரோடு மாவட்ட போலீசார் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். போலீசாருக்கான, மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மதுக்கரை துப்பாக்கிச் சுடும் பயிற்சி களத்தில் நடந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பங்கேற்றனர். போட்டியில், 100 யார்டு பிரிவில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் முருகன் முதல் இடம் பிடித்தார். திருப்பூரைச் சேர்ந்த முதல் நிலைக்காவலர் முருகேசன் இரண்டாவது இடத்தையும், ஈரோடு முதல் நிலைக் காவலர் சிவக்குமார் மூன்றாவது இடமும் பிடித்தனர். 

200 யார்டு பிரிவில் தர்மபுரியைச் சேர்ந்த எஸ்.ஐ.,சவுந்தரராஜன் முதல் இடத்தையும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு இரண்டாவது இடத்தையும், கோவை மாநகரில் பணியாற்றும் முதல் நிலைக்காவலர் சரவணன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

அடுத்ததாக 300 யார்டு பிரிவில் நீலகிரி மாவட்ட எஸ்.ஐ.,ஹேமலதா முதல் இடத்தையும், ஈரோடு மாவட்ட காவலர் சுப்பிரமணி இரண்டாம் இடத்தையும், ஏட்டு ராதாகிருஷ்ணன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 300 யார்டு(ஸ்நாப்)பிரிவில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏட்டு சித்தேஸ்வரன் முதல் இடத்தையும், நாமக்கல் மாவட்ட ஏடு மணி இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்ட முதல் நிலைக்காவலர் சுப்பிரமணி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

பிஸ்டல், ரிவால்வர் மற்றும் கார்பன் ரக துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்தது. மூன்று நாட்கள் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று மதுக்கரை துப்பாக்கி சுடும் பயிற்சி களத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் உமாநாத், மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு, மேற்கு மண்டல ஐ.ஜி., சிவனாண்டி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.

கோவை கமிஷனர் சாம்பியன்: கோவையில் நடந்த மண்டல துப்பாக்கி சுடும் போட்டியில், பிஸ்டல் மற்றும் ரிவால்வர் பிரிவில் மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு சாம்பியன் பட்டம் பெற்றார்.

 பிஸ்டல், ரிவால்வர் மற்றும் கார்பன் ரக துப்பாக்கி பிரிவுகளில் போட்டிகளில் ஈரோட்டைச் சேர்ந்த ரமேஷ், இன்ஸ்பெக்டர் குணசேகரன், சேலத்தைச் சேர்ந்த ஆனந்தன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ஆகியோர் முதல் மூன்று இடங்களை தொடர்ந்து பிடித்தனர். ரிவால்வர், பிஸ்டல் பிரிவில் தனி நபர் சாம்பியனாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டார்.

 

0 comments: