வீட்டுக்கே வருகிறது "பைபர் ஆப்டிக் கேபிள்'; ஒரே இணைப்பில் போன், "டிவி', நெட்
இந்திய தொலைத்தொடர்புத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., "3ஜி' அலைவரிசையான, முகத்துக்கு முகம் பார்த்து பேசும் செல்போன் சேவையை சில மாதங்களுக்கு முன் கோவையில் அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து, தற்போது வீட்டுக்கு நேரடியாக பைபர் ஆப்டிக்கல் கேபிள் சேவையை அளிப்பதால், கோவை மக்கள் அதிநவீன தொலைத்தொடர்பு சேவையை பெற முடியும். இந்த பைபர் ஆப்டிக்கல் கேபிள் பைபர் வழியாக, ஒரே சமயத்தில் "டிவி' இணைப்பு, டெலிபோன், இன்டர்நெட், இன்டர்நெட் டெலிபோன், வீடியோ கான்பிரன்சிங் போன்ற சேவைகளையும் எளிதாக பெறமுடியும். இந்த சேவையை, "எப்.டி.டி.எச்' என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை அறிமுக துவக்க விழா, கோவை, புரூக் பீல்டு வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், எஸ்.பி., கண்ணன் முதல் இணைப்பை வழங்க, புரூக் பீல்டு இயக்குனர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
விழாவில்,எஸ்.பி., கண்ணன் பேசியதாவது: தொலை தொடர்புத்துறையில் அடுத்த கட்ட நவீன தொழில்நுட்பமே பைபர் டி.டி.எச்., இணைய உலகில் "ஹேக்கிங்' போல, தொலைபேசியில் "பிரிகிங்' என்ற முறை உண்டு. தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது; "டேப்'செய்வது போன்றவையும் இதில் அடங்கும்.பைபர் ஆப்டிகல் தொழில்நுட்பத்தில் அதிவேகத்தில் டேட்டாக்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றை இடைமறிப்பதும் கூட கடினம். எனவே, தொலைபேசி உரையாடல்களை இடைமறிப்பது தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும், என அரசுக்கு கோரியுள்ளோம். நவீன தொழில்நுட்பங்களை பொதுமக்கள் நாட்டின் மேம்பாட்டுக்காகவும், நல்ல செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
பைபர் டி.டி.எச்., சேவை குறித்து பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் மேத்யூ கூறியதாவது: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இச்சேவை துவங்குகிறது. முதலில் நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படும். பின், அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஒரே இணைப்பில் கேபிள் "டிவி'; பிராட்பேண்ட், தொலைபேசி இணைப்புகளை தனித்தனியாக ஒரே சமயத்தில் பெற முடியும். இதற்கான மோடத்தில் ஐந்து இணைப்புகளுக்கான இடம் விடப்பட்டிருக்கும். மூன்று சேவைகளை இவ்விணைப்புகள் வழியாக பெறலாம். எதிர்காலத்தில் கூடுதல் வசதிகளை பெற கூடுதலான இரு இணைப்புகள் விடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் எக்சேஞ்ச் வரை மட்டுமே பைபர் ஆப்டிகல் இணைப்பு இருந்தது. தற்போது வீடு வரை வருகிறது. பிராட்பேண்ட் திட்டத்தில் 500 ரூபாய் முதல் இச்சேவையில் பெற முடியும். டெலிபோனுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும். வரும் முதல் தேதியில் இருந்து தரைவழித் தொலைபேசிக்கு வினாடிக்கு 27 பைசாவாக கட்டணம் குறைக்கப்படுகிறது. கேபிள் "டிவி'யைப் பொருத்தவரை இந்தியாவின் மிகத்துல்லியமான ஒளிபரப்பாக இருக்கும். 100 ரூபாய் முதல் வாடிக்கையாளர் விரும்பும் "பேக்கேஜை' தெரிவு செய்யலாம். இவ்வாறு, பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் மேத்யூ கூறினார்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல்., பொதுமேலாளர் முரளிதரன், துணைப்பொதுமேலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment