ரயில் எண்கள் இனி ஐந்து இலக்கமாக மாற்றம்; டிச., 20ல் அமலாகிறது
புதுடில்லி: நாடு முழுவதும் ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையிலும், ரயில்களை எளிதில் அடையாளம் காணும் பொருட்டும் ரயில்களுக்கு இனி ஐந்து இலக்க எண் வழங்கப்பட உள்ளது. இது வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால், தற்போதுள்ள ரயில்களின் பெயர்களில் மாற்றம் வராது.
இந்திய ரயில்வே துறைதான் நாட்டிலேயே மிகப்பெரிய துறையாக செயல்படுகிறது. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலுக்கும் நான்கு இலக்க அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து ரயில்களின் இயக்கங்களை கண்காணிக்கும் வகையிலும், முக்கிய ரயில்கள் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்கு எளிதில் தெரியும் வகையில் நவீன கம்ப்யூட்டர் மயத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கு வசதியாக, ரயில்களுக்கு ஐந்து இலக்க எண் வழங்கப்பட உள்ளது. அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப ரயில்வே துறையும் விரிவடைந்து வருகிறது. ஆண்டுதோறும் புதிய ரயில்கள் சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக, ரயில் முன்பதிவு மற்றும் ரயில்களை அடையாளம் காண்பதில் ரயில்வே அலுவலர்களுக்கும், பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அனைத்து ரயில்களையும் எளிதில் அடையாளம் காணும் வகையில், ஐந்து இலக்க அடையாள எண் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரயில்வே துறையின் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்களில் மாற்றம் செய்யுமாறு ரயில்வே தகவல்தொழில்நுட்ப மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களின் எண்களில் மட்டுமே மாற்றம் செய்யப்படுகிறது. ரயில்களின் பெயர்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி, துரந்தோ, ராஜ்தானி, சதாப்தி, ஜனசதாப்தி, சம்பர்க் கிராந்தி மற்றும் அனைத்து அதிவிரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், மெயில்கள் ஆகியவற்றுக்கு தற்போது நடைமுறையில் நான்கு இலக்க எண்ணுக்கு முன் 1 சேர்க்கப்படும். உதாரணமாக, சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்குரிய எண் 2637. இந்த எண்ணுக்கு முன்பாக 1 சேர்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான எண் 12637 ஆக இருக்கும். இதேபோன்று, கோடை மற்றும் விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள எண்களுக்கு முன் பூஜ்யம் சேர்க்கப்படும். ஐந்து இலக்க எண் நடைமுறை, உள்ளூர் மற்றும் புறநகர் ரயில்களுக்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளையும், கம்ப்யூட்டர் சாப்ட்வேரில் மாற்றம் செய்தபிறகு, முறையான அறிவிப்பை அந்தந்த மண்டல அலுவலகங்கள் வெளியிடும். இந்த ஐந்து இலக்க எண் நடைமுறை வரும் டிசம்பர் மாதம் 20ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
0 comments:
Post a Comment