இந்திராகாந்தியாக நடிக்கிறார் பிரியங்கா சோப்ரா

மும்பை : இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படத்தில், இந்திராவாக நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, "இந்திராகாந்தியின் கதை' என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படம் தயாராகிறது. முன்னதாக, இந்த படத்தில், நடிகை மாதுரி தீட்சித் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது, இந்திராவின் வேடத்தில், பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக தயாராகும் இந்த படத்தை இயக்குபவர் கிருஷ்ணா ஷா. இவர் ஏற்கனவே, "ஷாலிமர்' மற்றும் "ஹார்ட் ராக் ஷாம்பே' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். "இந்திராகாந்தியின் கதை' படம் குறித்து கிருஷ்ணா ஷா கூறியதாவது: இந்திராகாந்தியின் வாழ்க்கை குறித்து, ஏற்கனவே திரைக்கதை எழுதி வைத்திருந்தேன். வங்கதேச போர் தொடர்பாக, அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் பேச்சுக்கள் அடங்கிய, "பர்சனல் டேப்' எனக்கு கிடைத்தது. அதை வைத்து, எனது திரைக்கதையை மாற்றி அமைத்துள்ளேன். இதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இந்திராகாந்தி வேடத்தில், நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்திராவின் முகத்துடன், அவரது முகம் கிட்டத்தட்ட ஒத்திருப்பதால், மேக்கப் உதவியுடன் அவர் இந்திராவாகவே தெரிகிறார். இவ்வாறு கிருஷ்ணா ஷா கூறினார்.

 

0 comments: