ஆறு வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்ற பறந்து வந்த சிரஞ்சீவி

பெங்களூரு :ஆறு வயது சிறுமியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பறந்து வந்தார் நடிகரும், பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி.

தனியார் சேனலுக்காக கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களின் கோரிக்கையையும் அவர் நிறைவேற்றி வருகிறார். இதன்படி ராதா என்ற ஆறு வயது சிறுமி தனது கண்பார்வை குறைபாடுக்காக பெங்களூரில் நாராயணா நேத்ராலயாவில் அனுமதிக்கப்பட்டு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டாள்.அறுவை சிகிச்சை செய்த பின் கண் திறந்து பார்க்கும் போது, "நடிகர் சிரஞ்சீவியைத் தான் முதலில் பார்ப்பேன்' என, தனியார் சேனல் நிகழ்ச்சியின் போது கன்னட நடிகர் சிவராஜ்குமாரிடம் தெரிவித்திருந்தார்.சிறுமியின் கோரிக்கை பற்றி  நடிகர் சிரஞ்சீவிக்கு சிவராஜ்குமார் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட சிரஞ்சீவி, சிறுமி கண் திறக்கும் போது,  அவர் முன் தோன்றுவதாக உறுதி அளித்தார். அதன்படி, கடந்த வெள்ளியன்று ஐதராபாத்திலிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த சிரஞ்சீவி, நாராயணா நேத்ராலயாவில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப தயாராக இருந்த சிறுமி ராதாவை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத சிறுமி ராதா, மகிழ்ச்சி பொங்க சிரஞ்சீவியை கண்குளிர பார்த்து ஆனந்தம் அடைந்தார்.அதே நேரத்தில் தனது கண்களையும் தானமாக வழங்குவதாக அறிவித்த நடிகர் சிரஞ்சீவி, கண்தான விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, நாராயணா நேத்ராலயா கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் புஜங்க செட்டியிடம் வழங்கினார்.பின்னர் சிரஞ்சீவி கூறுகையில், "மாநில அரசியல் சூழ்நிலையில் மிகவும் பிசியாக இருந்தாலும், சிறுமியின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க பெங்களூருக்கு விரைந்து வந்தேன். இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது' என்றார்.

 

0 comments: