எழுத்தாளர் மா.கமலவேலனுக்கு பாலசாகித்ய புரஸ்கார் விருது


திண்டுக்கல், ஆக. 26: திண்டுக்கல்லைச் சேர்ந்த எழுத்தாளர் மா.கமலவேலன் மத்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார் நினைவு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு 1998-ம் ஆண்டு மாநில அரசு நல்லாசிரியர் விருது வழங்கி உள்ளது.
1961-ம் ஆண்டு முதல் சிறுவர் நூல்களை எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், சிறுவர்மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்.
சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளிலும் இவரது பங்களிப்பு உள்ளது. வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள், உரைச் சித்திரங்கள் வழங்கியுள்ளார்.
சாகித்ய அகாதெமி இந்த ஆண்டு முதல் குழந்தைகள் இலக்கியத்துக்காக பாலசாகித்ய புரஸ்கார் விருதை ஏற்படுத்தி உள்ளது. இப்பரிசு பெறும் முதல் தமிழ் எழுத்தாளர் மா.கமலவேலன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் எழுதிய அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்ற சிறுவர் நூலுக்கு இப்பரிசு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மா.கமலவேலன் தனது இலக்கியப் படைப்புகளுக்காக கோவை லில்லிதேவ சிகாமணி விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேஷய்யா விருதும் பெற்றுள்ளார்.
இவருக்கு புதுதில்லியில் நவம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ள குழந்தைகள் தின விழாவில் பாலசாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது

 

0 comments: