புதுவை அரசு மருத்துவ மாணவர்களுக்கு இலவச கல்வி

புதுச்சேரி,  ஆக. 29:  புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மருத்துவக் கல்வி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் இ.வல்சராஜ் (படம்) தெரிவித்தார்.
புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியது:
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த கல்லூரியில் ஆண்டுக்கு 150 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு எந்தக் கட்டணமும் கிடையாது.
தனி வகுப்பு கட்டணம்கூட வசூலிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மருத்துவக் கல்வி இலவசமாக வழங்கப்படும். மாணவர் சேர்க்கையின்போது இவர்களிடம் திருப்பி அளிக்கக்கூடிய வைப்புத் தொகையாக  10 முதல் 15 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்.
படிப்பை முடித்த பிறகு அவர்கள் செலுத்திய தொகை அவர்களிடமே திரும்ப வழங்கப்படும்.
 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது விதிமுறை. அதனால் அவர்களுக்கு இடங்கள் வழங்குவது குறித்தும், அவர்களுக்கான  கட்டணம் குறித்தும் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்.
 செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்படும்.
 இம்மருத்துவக் கல்லூரிக்கு இதுவரை
 137 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  200 கோடிக்குள் மருத்துவக் கல்லூரியின் மொத்த பணிகளும் முடிக்கப்படும் என்றார்

 

0 comments: