படிக்கின்ற காலத்துக்கு கல்விக் கடனுக்கு வட்டி இல்லை: ப.சிதம்பரம்
காரைக்குடி,ஆக.29: கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு, 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி இல்லை என்றார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வங்கிகள் பங்கேற்ற மாவட்ட ஆலோசனைக் குழு சிறப்பு முகாம், ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டலம் சார்பில் நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 643 மாணவ, மாணவிகளுக்கு | 10 கோடியே 41 லட்சத்து, 36 ஆயிரம் கல்விக் கடன் வழங்கி, அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:
கடுமையான போட்டிகளின் மூலமாக உயர் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பெறுவதுதான் கல்வி. அதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
கல்விக் கடன் வழங்கியதில் 2010-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி முடிய நாடு முழுவதும் இருப்பில் உள்ள கல்விக் கடன்களைக் கணக்கில் கொண்டால், 19 லட்சத்து 41 ஆயிரத்து 882 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சத்து 63 ஆயிரத்து 429 பேர் கல்விக் கடன் பெற்றிருக்கிறார்கள். நாட்டின் கல்விக் கடன் பெறும் மாணவர்களில் நான்கில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
எனது அரசியல் வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன் தீட்டப்பட்ட திட்டம் கல்விக் கடன் திட்டம். கல்விக் கடன் பெறுவோர் கல்விக் கடனை நிர்வகிக்கும் கனரா வங்கியை அணுகலாம்.
கல்விக் கடனுக்கான வட்டி விவரம் குறித்து நிதித் துறையிலிருந்து எனக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள். கல்விக் கடன் பெற்ற மாணவர்களுக்கு 2009, 2010-ம் ஆண்டிலிருந்து தரப்பட்டிருக்கும் கல்விக் கடனுக்கு படிக்கின்ற காலங்களில் வட்டி கிடையவே கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள், எதிலும் முதல் வரிசையில் இடம்பெற வேண்டும். வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. வங்கித் துறையில் மட்டும் 1 லட்சம் பேர் பணியில் அமர்த்தப்படவிருக்கிறார்கள். அந்த வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.
விழாவில், இந்தியன் ஒவர்சீஸ் வங்கித் தலைவர் எஸ்.ஏ. பட் தொடக்க உரையாற்றினார். காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என். சுந்தரம், திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினர் கேஆர். ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில், தொழிலதிபர் பிஎல். படிக்காசு, சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் எஸ். மாங்குடி, இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் பி.வரதராஜன், யுகோ வங்கியின் இணைப் பொது மேலாளர் டி.என்.ரெüத்ரி, பேங்க் ஆப் இந்தியா இணைப் பொது மேலாளர் ஆர்.ஏ.சங்கரநாராயணன், கனரா வங்கியின் இணைப் பொது மேலாளர் பி.ஆர்.பாலசுந்தர், ஸ்டேட் வங்கி இணைப் பொது மேலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஐ.ஓ.பி. காரைக்குடி மண்டல முதன்மை மேலாளர் எம். ராமதாஸ் வரவேற்றார். இந்தியன் வங்கியின் வட்டாரத் தலைவர் கதிரேசன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment