அன்னை தெரசா - நூற்றாண்டு விழா நினைவுகள்

அன்புக்கும், கருணைக்கும் ஓர் மகத்தான கட்டமைப்பை உருவாக்கி அதை உலகம் எங்கிலும் தழைத்துப் பரவச் செய்து, போற்றுதலுக்கும் வழிபாட்டுக்கும் உரிய தெய்வத் திருஉருவமாக விளங்கும் அன்னை தெரசாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை 2010 ஆகஸ்ட் 26 ஆம் தேதி தொடங்கி இந்திய நாடும் அதன் மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட இருக்கிறார்கள். 

கடந்த 2003இல் அன்னை தெரசா ஆசிர்வதிக்கப்பட்டவராக போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டார். ஆசிவதிக்கப்படுதல் என்பது, "கத்தோலிக்கத் திருச்சபையின் உறுப்பினர்களில் ஒருவர் பாவமன்னிப்பு கோரியவர் அல்லது வீர மரணம் அடைந்த தியாகி என்ற முறையில் புனித வாழ்க்கைக்கு, ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு, அதாவது சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்குத் தகுதியானவர் என கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர் என்ற முறையில் போப்பாண்டவரால் பிரகடனம்" செய்யப்படுவதாகும். 

அன்னை தெரசாவின் வாழ்க்கை 'கடவுளின் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களுக்கு' சேவை செய்வதற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை என மதிப்பிடுவதற்கு உரியதாகும். பைபிளின் 'கடைசித் தீர்ப்பில்' விவரிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கும், நேசிக்கப்படாதவர்களுக்கும் சேவை செய்தல் என்ற கட்டளைக்குக் கட்டுப்பட்டு மெய்யாகவே வாழ்ந்தவர் என்ற முறையில் 'சொர்க்கத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு' அவர் தகுதியானவர்: 

"பிறகு அவரின் வலது கைப்பக்கத்தில் இருந்தவர்களை நோக்கி அரசர் கூறுவார், என் தந்தையால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களே, வாருங்கள், உலகின் அடித்தளத்தில் இருந்து உங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாட்சியை ஏற்றுக் கொள்ளுங்கள்; நான் பசியாக இருநூதேன் நீங்கள் எனக்கு சாப்பிடுவதற்குக் கொடுத்தீர்கள்; நான் தாகத்துடன் இருந்தேன் நீங்கள் எனக்குக் குடிப்பதற்குக் கொடுத்தீர்கள்; புதியவனான என்னை உள்ளே அழைத்துச் சென்றீர்கள்; நிர்வாணமாக இருந்த எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்ற என்னை வந்து கவனித்தீர்கள்; சிறையில் இருந்தபோது என்னை வந்து பார்த்தீர்கள். 

அதைத் தொடர்ந்து அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் நியாயவான் கூறுவார் 'எப்போது நாங்கள் உங்களை பசியுடன் பார்த்தோம், உங்களுக்கு உணவளித்தோம்; அல்லது எப்போது நாங்கள் உங்களை தாகத்துடன் பார்த்து உங்களுக்கு குடிப்பதற்குக் கொடுத்தோம்? எப்போது நாங்கள் உங்களைப் புதியவராகப் பார்த்து உள்ளே அழைத்துச் சென்றோம் அல்லது நிர்வாணமாக இருந்த உங்களுக்கு ஆடை அணிவித்தோம்? அல்லது எப்போது நாங்கள் உங்களை நோயாளியாக அல்லது சிறையில் பார்த்தோம்? 

இதற்குப் பதில் அளித்து அரசர் சொல்லுவார், ஆமென், என் சகோதரர்களில் கடைக்கோடியில் இருப்பவர்களில் ஒருவருக்கு நீங்கள் இதைச் செய்கின்ற காலம் வரையிலும், இதை நீங்கள் எனக்குச் செய்வதர்கள் ஆவீர்கள்."

முன்னாள் யுகோஸ்லேவியாவில் உள்ள மெசடோனியாவைச் சேர்ந்த ஸ்கோப்ஜே நகரில், 1910 ஆகஸ்ட் 26இல் ஆக்னஸ் கான்ஸா பொஜாக்ஸியு ஆகப் பிறந்த அன்னை தெரசா எப்போதுமே சுதந்திரமானவராகவும், கீழ்ப்படிந்து நடப்பவராகவும், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சில கருத்துக்களும் எதிர்பார்ப்புகளுக்கும் அறைகூவல் விடுப்பவராகவும் இருந்தார். எதிர்பார்த்ததற்கு முரணாகத் தோன்றினாலும் கூட மற்றவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதற்கு விருப்பம் உடையவராகவும், அவரது மனசாட்சியைப் பின்பற்றி நடப்பவராகவும் இருந்தார் என்பதற்கு அவரது சொந்த வாழ்க்கைக் கதையில் பல்வேறு காட்சிகள் அடங்கியுள்ளன. 

எதிர்கால அன்னை தெரசா, 1928இல் அவரின் குடும்பத்தையும் அவருக்குத் தெரிந்த வாழ்க்கையையும் விட்டு விலகி வெகு தொலைவில் இருந்த அயர்லாந்தில் அவரின் சமய வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த வாழ்க்கைக்கு வந்த பின் அவரது தாயாரை அவர் மீண்டும் ஒருபோதும் சந்திக்கவே இல்லை. சிலருக்கு மட்டுமே புரிந்த மொழியில் அவர் பேசினார். அந்தக் காலக்கட்டத்தில் அவர் "மிகவும் சிறியவராக, அமைதியும், கூச்சமும் நிறைந்வராக இருந்தார்" என்று சகோதரி ஒருவர் நினைவு கூர்ந்திருக்கிறார். அந்த சமயப் பிரிவின் மற்றொரு உறுப்பினர் அவர் 'சாதாரணமான' பெண் ஆக இருந்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். எப்படி இருந்தபோதிலும், அசைக்க முடியாத உறுதி, சுய கட்டுப்பாடு என்ற ஒரு தனிச்சிறப்பான பண்பு அவரின் வாழ்க்கையில் எப்போதுமே ஓர் அங்கமாக இருந்து வந்தது. லோரெட்டோ சகோதரிகள் அமைப்புடனான அவரது இணைப்புக்க அலு வலுவூட்டியது. அவரது வாழ்க்கை முழுவதிலும் அந்தப் பண்பு நிறைந்திருக்கிறது. 

ஓராண்டு கழித்து, 1929இல் டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டோ சகோதரிகள் அமைப்பில் பயிற்சி பெறுவதற்காக ஆக்னஸ் கான்ஸா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதல் உறுதிமொழி ஏற்ற பிறகு, கொல்கத்தாவில் உள்ள புனித மேரி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு அவர் அனுப்பப்பட்டார். செல்வந்தர்களின் புதல்விகளுக்கான பாதுகாக்கப்பட்ட அந்த பள்ளிச் சூழலில்தான், "ஏழைகளிலும் பரம ஏழைகளுக்கு" சேவை செய்யும் தெரசாவின் புதிய வாழ்க்கைத் தொழில் உருப்பெற்று வளர்ந்தது. 1946இல் ஓய்வெடுப்பதற்காக டார்ஜிலிங் சென்றபோது தெரசா கேட்ட "இரண்டாவது அழைப்பின்" தெளிவான செய்தியாக அது இருந்தது. 

அவருக்கு அது கடவுள் காட்டிய திசைவழி என்பதில் "ஒருபோதும் சந்தேகம் கொள்ளாத" தெரசா அந்த வழியைப் பின்பற்றுவதற்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்தினார். "தெருக்களில் இறங்கிச் செல்வதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த லொரேட்டோ சகோதரிகள் அமைப்பை விட்டு வெளியேறுவதற்கும் முடிவு செய்தேன். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஏசு சிறித்துவைப் பின்பற்றி குடிசைப் பகுதிகளுக்குச் சென்று ஏழைகளிலும் பரம ஏழைகள் மத்தியில் அவருக்கு சேவை செய்யுமாறு எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை நான் கேட்டேன்" என்று தெரசா குறிப்பிட்டிருக்கிறார்
முதலில் குடிசைப் பகுதி குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் பணியைத் தொடங்குவதற்கு அவர் விவேகத்துடன் முடிவு செய்தார். அது அவர் மிகவும் நன்கறிந்த பணி. முறையான கருவிகள் எதுவும் இல்லாத போதிலும் - புழுதி மண்ணில் எழுதுதல் என - என்ன கிடைத்ததோ அதைப் பயன்படுத்திக் கொண்டார். ஏழை மக்களின் குழந்தைகளை எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக மாற்றுவதற்கு அவர் முயன்றார். அவரை அந்த மக்கள் நன்கு தெரிந்து கொண்ட பிறகு, படிப்படியாக அழுக்கடைந்த குடிசைகளில் நெருக்கியடித்துக் கொண்டு வாழும் ஏழை மக்களையும், அவர்களது குடும்பங்களில் உள்ள நோயாளிகளையும் மற்றவர்களையும் சென்று பார்த்து அவர்களது தேவைகளை கேட்டறியத் தொடங்கினார். 

அவர் சந்தித்த ஏழை மக்களிடம், முடிவே இல்லாத மனிதத் தேவைகளை தெரசா கண்டறிந்தார். அடிக்கடி களைத்து சோர்ந்து போனார். களைப்புக்கு இடையிலும் அவர் ஒருபோதும் பிரார்த்தனையைக் கைவிட்டதில்லை. அதையே அவரது சேவைகள் அனைத்துக்கும் ஆதரவும், வலிமையும் ஆசிர்வாதமும் அளிக்கும் ஆதாரமாகக் கண்டார். 

தெரசா நீண்ட காலம் தன்னந்தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. ஓராண்டுக்குள் அவர் எதிர்பார்த்ததைவிடவும் அதிக உதவிகள் வரத் தொடங்கின. அறப்பணிக்கும் கருணைக்கும் தங்கள் மனக் கதவைத் திறப்பதற்கு பலரும் தெரசாவின் முன்னுதாரணத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர் என்பது போலத் தோன்றியது. சேவை செய்வதற்கு இளம் பெண்கள் தன்னார்வத்துடன் முன்வந்தனர். அவர்களே பின்னர் தெரசாவின் அறப்பணியாளர் சபைக்கு அடித்தளமாக மாறினர். மற்றவர்கள் உணவுப் பொருள்களும், உடைகளும், மருந்துப் பொருள்களும், பணமும் வழங்கினர். பயன்படுத்திக் கொள்வதற்கு கட்டடங்களைத் தந்தனர். ஆதரவும், உதவியும் பெருகியதால் துன்பப்படும் மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் மேன்மேலும் சேவைகளை விரிவுபடுத்த முடிந்தது. 

கொல்கத்தாவின் குறுகிய, சிறிய தெருவில் விதைக்கப்பட்டு, அன்னை தெரசாவின் நம்பிக்கை, கருணை உறுதி ஆகியவற்றால் வளர்க்கப்பட்ட அறப்பணியாளர்கள் சபை, சிறிய விதையாக இருந்தாலும் நெடிது உயர்ந்து வளரும் என மறைநூலில் கூறப்பட்டுள்ள கடுகுச் செடியின் விதை போல வளர்ச்சி அடைந்தது. 1997இல் அன்னை தெரசா காலமானபோது, அறப்பணி சகோதரிகள் சபையில் 3.914 உறுப்பினர்கள் இருந்தனர். உலகின் 123 நாடுகளில் 594 சமூகங்களில் கிளைகள் அமைந்திருந்தன. அவரது பணி தொடர்கிறது. இன்று இந்த அமைப்பு உலகின் 133 நாடுகளில் 697 கிளைகளுடன் 4,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக வளர்ந்திருக்கிறது. 

பட்டினியுடனும், தாகத்துடனும், ஆடையின்றி நிர்வாணமாகவும், வீடில்லாமலும், அறியாமையிலும், சிறைப்பட்டும், ஒடுக்கப்பட்டும், தொழுநோயில் துன்பப்படுவோராகவும், நேசிக்கப்படாதவர்களாகவும், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாகவும், ஆதரவற்ற நோயாளிகளாகவும், ஆதரவின்றி செத்துக் கொண்டிருப்பவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும், ஒதுக்கி வைக்கப்பட்டவர்களாகவும், மனித சமுதாயத்துக்கு சமையாக இருக்கின்றவர்களாகவும், வாழ்க்கையில் அனைத்து நம்பிக்கையையும் இழந்தவர்களாகவும் இருக்கும் "ஏழைகளிலும் பரம ஏழைகளுக்கு" அறப்பணி சகோதரிகள் சபையின் சாசனப்படி இந்தக் 'கடவுளின் சேவகர்கள்' தன்னலமற்ற சேவையும் உதவியும் செய்து வருகின்றனர். 

தெரசா‌வி‌ற்கு ‌விள‌க்கு‌ம் தேவசகாய‌ம்
1970-களில் நான் சண்டீகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது, அன்னையுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் பேறும், அவருடன் இணைந்து சண்டீகர் நகரில் அழகிய 'இல்லம்' ஒன்றைக் கட்டும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 'அழகிய நகரம்' என்று சண்டீகர் அழைக்கப்பட்ட போதிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் துன்பத்தில் வாடும் மக்கள், ஏழை மக்கள், வெறுக்கப்பட்டவர்கள், மன வளர்ச்சி குன்றியவர்கள், கைவிடப்பட்டவர்கள், தொழுநோயாளிகள், ஆதரவின்றி சாகும் நிலையில் இருப்பவர்கள் இருந்தனர். கட்டடங்களின் அழகுக்கும் அப்பால், ஏழை மக்களின், வெறுத்து ஒதுக்கப்பட்ட மக்களின் இதயங்களை தொடுவதற்கு அந்த நகரத்துக்கு ஓர் 'ஆன்மா' தேவைப்பட்டது. சண்டீகர் நகரின் நடுவில் அமைக்கப்பட்ட 'சாந்தி - தான்' இல்லாம் உண்மையில் அத்தகைய ஓர் 'ஆன்மா'வாக விளங்கியது. அதில் அடைக்கலம் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு உணவளித்துப் பாதுகாக்கும் பணியில் மக்கள் பெருமளவில் பங்கேற்றது அதற்குச் சான்றாகும். அன்னை தெரசா அவருக்கு உரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும், அடக்கத்துடனும் அதை சாதித்துக் காட்டினார். 

சா‌ந்‌தி - தா‌ன்
அன்னை தெரசாவுடன் நான் நெருக்கமாக இணைந்து பணியாற்றிய வாய்ப்பு பத்தாண்டுக் காலத்துக்கும் மேல் நீடித்தது. மெய்யான 'நேர்மை, எளிமை, பணிவு' என்பவைதான் நான் அவரிடம் கண்ட மகத்தான பண்புகள். ஊழல், வஞ்சகம், ஆணவம் ஆகியவற்றுடன் காணப்படும் இன்றைய கிறித்துவ தலைமைக்கு நேர் மாறாக அவரது பண்புகள் இருந்தன. ஜான் கெப்ளேயின் வார்த்தைகளில் சொன்னால், "மெய்யான பணிவில் யார் தன்னை ஆழ்த்திக் கொள்கிறாரோ அவரிடத்தில்தான் கடவுள் எழுந்தோங்கி அருள்வார்." அன்னை தெரசா முதலில் ஆசிர்வதிக்கப்பட்டதும் அதைத் தொடர்ந்து விரைவிலேயே அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்டதும் இந்த நம்பிக்கைக்குச் சான்றாகும். 

அன்னை தெரசா அவர் ஆற்றிய சேவைகளின் காரணமாக, கிறித்துவப் பண்புகள் நிறைந்த மெய்யான சமயத் துறவியாக, நிகரற்ற தலைவராக உயர்ந்து நிற்கிறார். 'கடவுளின் கீழ்நிலைக் குழந்தைகளின்' மீது மெய்யான அன்பும், கருணையும் காட்டியதன் காரணமாக, நமது பண்டைய கலாசாரத்தையும், 'தருமத்தையும்' அன்னை தெரசா மேலும் வளப்படுத்தி இருக்கிறார். அவரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா நம் அனைவருக்கும் பெருமைக்குரிய தருணம் ஆகும். ஏனெனில் வேறு எல்லாவற்றைக் காட்டிலும் அன்னை தெரசா 'பாரதம்' எனப்படும் இந்தியாவின் மெய்யான புதல்வி ஆவார்
நன்றி: webdunia

 

0 comments: