முன்னேற விரும்பினால் சினிமா பார்க்காதீர்: சைலேந்திரபாபு அறிவுரை

http://img.dinamalar.com/data/thumb/thumb_108968.jpg கோவை : ""வாழ்க்கையில் முன்னேற, "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து நேரத்தை மாணவர்கள் வீணடிக்கக்கூடாது,'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திர பாபு பேசினார்.


தலைமைப்பண்பு திறன் வளர்ப்பு குறித்த கலந்துரையாடல், சரவணம்பட்டியில் உள்ள சங்கரா கல்லூரியில் நடந்தது.

கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு பேசியதாவது:வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன;வேலைக்கான தகுதியுள்ளவர்கள் குறைவாகவே உள்ளனர். இந்தியாவில் பட் டப்படிப்பு முடித்து வெளியேறும் மாணவர்களில் 80 சதவீதத்தினர் வேலைக்கான தகுதி இல்லாதவர்களாகவே உள்ளனர். கல்வி என்பது படிப்பை மட்டுமல்ல, வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அளிப்பதாக இருக்க வேண்டும். என்ன படிப்பு படித்தாலும் அப்படிப்பை முடிக்கும் போது அறிவு, திறமை, மனப்பக்குவம் உட்பட நடத்தையில் மாற்றம் வந்திருக்க வேண்டும். மாற்றம் ஏற்படுத்தவில்லை என்றால் முழுமையான அறிவை பெறவில்லை என்று பொருள். வேலை கிடைத்தவுடன் பல ஆசிரியர்கள் படிப்பதை நிறுத்திக் கொள்கின்றனர். மாணவர்களை விட, ஆசிரியர்கள்தான் அதிகமாக படிக்க வேண்டும். நிர்வாகவியல் படிப்பு படிக்கும் மாணவனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவனும் தலைமை பண்பு திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சிறந்த தலைமைப் பண்பும், தகவல் தொடர்பு திறனும் இருந்தால் எந்த நிறுவனமும் அதிக சம்பளத்துடன் வேலை வழங்கும். இந்த இரண்டு திறன்களும் இருந்தால் தனியாக தொழில் துவங்கி 1,000 பேருக்கு வேலை வழங்கவும் முடியும். ஒரு ஆசிரியர் சிறந்த தலைமை பண்பு உள்ளவராக இருப்பது முக்கியம்.

மாணவர் மனதில் தலைமை பண்பு திறனை ஆசிரியர் உருவாக்க வேண்டும். தலைவராக விரும்புபவர்கள் முதலில் நல்ல மனிதனாக இருக்க வேண்டும். படிக்கும்போதே ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்ப்பது முக்கியம். வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மாணவர்கள் தமிழ் சினிமாவை பார்க்காதீர். சிந்திக்கும் திறன் மழுங்கி விடும். திறமை வளராது. இன்று எவரிடமும் இல்லாத "நேரம்' எனும் பொக்கிஷம், மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. "டிவி' சீரியல், சினிமா, கிரிக்கெட் மேட்ச் பார்த்து அந்த பொக்கிஷத்தை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு பேசினார்.

கல்லூரி செயலாளர் ராமச்சந்திரன், அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் முருகேசன், நிர்வாகவியல் துறை முதல்வர் ஸ்ரீகாந்த், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் திரளாக பங்கேற்றனர்.

 

0 comments: