சென்னையில் தமிழாய்வு கருத்தரங்கம்
சென்னை : ஆசிய பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் தமிழாய்வு கருத்தரங்கம், வரும் ஜனவரி மாதம் சென்னை ஆசியவியல் நிறுவனத்தில் நடக்கிறது.
இது பற்றி சென்னை ஆசியவியல் நிறுவன இயக்குனர் ஜான் சாமுவேல் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழர்கள் மிகப் பழங்காலம் முதல் கிரேக்கம், ரோமானியம், சிரியா, அரேபியம் ஆகிய நாடுகளுடன் பண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தனர். இதனால், கிரேக்கம், சிரியா, அராபி ஆகிய மொழிகளில் தமிழின் தாக்கம் அதிகமிருந்தது. அதேபோல் சீனா, கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளுடனும் குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, பர்மா, கம்போடியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய நாடுகளுடனும் தமிழர்கள் வாணிகப் பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இந்த நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் பரந்திருப்பதைக் காண முடிகிறது. இடைக்காலத்தில் புத்த துறவிகள் மற்றும் வணிகர்களால் தமிழ்ப் பண்பாடு, ஆசிய நாடுகள் அனைத்திலும் பரவியது. இந்த பண்பாட்டுப் பயணம் பிற்காலத்தில் மேலும் விரிவு பெற்றது.
இவற்றை விரிவாக ஆராய, ஆசிய பண்பாட்டு வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சர்வதேச தமிழாய்வுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில், 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் ஆய்வுரை வழங்க உள்ளனர். கருத்தரங்க ஆய்வுரைகள் மூன்று தொகுதிகளாக வெளியிடப்படவுள்ளன. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர், ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் அஞ்சல், சென்னை - 119 என்ற முகவரியிலும், 98405 26834 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment