"ஆசிரியர்கள் கையில் மாணவர்கள் எதிர்காலம்' எரிசக்திதுறை தலைமை செயலர் பேச்சு
தர்மபுரி: ""ஆசிரியர்கள் மாணவர்களை பிரம்பால் அடிப்பதால், அவர்களுடைய எதிர்காலம் திசைமாற வாய்ப்புள்ளது,'' என, தமிழ்நாடு எரிசக்தி துறை தலைமை செயலர் கிறிஸ்துதாஸ் தெரிவித்துள்ளார்.தர்மபுரி பச்சமுத்து கல்வியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி சேர்மன் பாஸ்கர் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் முல்லைவேந்தன், இன்பசேகரன், டில்லிபாபு, வேலுச்சாமி, கல்லூரி செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இயக்குனர் சங்கீத்குமார் வரவேற்றார்.
தமிழ்நாடு எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலர் கிறிஸ்துதாஸ் காந்தி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:தற்போது பள்ளிகள் நூறு சதவீதம் வெற்றி என்ற இலக்கு என்பதற்கு பதிலாக லாப நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் கல்வி தரம் பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களை இவற்றை தவிர்த்து மாணவர்களின் கல்வி திறனை வளர்த்து, அவர்களை முன்னேற்றம் அடைய செய்ய வேண்டும். சில ஆண்டுக்கு முன் உயர்கல்வி என்பது ஏழை, எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது. தற்போது அந்த நிலைமை மாறி கிராமங்களிலும் இன்ஜினரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி புரட்சி வரவேற்க தக்கது.
பின்தங்கிய மாவட்டம் என தர்மபுரி மாவட்டத்தை கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. மாவட்டத்தில் இன்று பல கல்லூரிகள் துவங்கப்பட்டு கல்வி வளர்ச்சியில் தர்மபுரி மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புறத்தில் உள்ள மாணவர்களும் தற்போது கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி படிக்கின்றனர். இதனால், மாவட்ட கல்வி அறிவும் சீராக உயர்ந்து வருகிறது. அதியமான் ஆண்ட தர்மபுரியில் அவ்வையாரும் இருந்துள்ளார். இவர்களுடைய காலத்தில் கல்விக்கும், தமிழுக்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட்டது.அதேபோன்ற ஒரு கல்வி முக்கியத்தும் நிலை தற்போது தர்மபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கல்லூரிகள், பள்ளிகள் என கல்வி சம்பந்தப்பட்ட துறைகளும், நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தை பின் தங்கிய மாவட்டம் என கூறுவதை நிறுத்திவிட்டு கல்வி வளர்ச்சிக்கு மேலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சமுதாயத்தில் ஆசிரியர் தொழில் மதிப்பு மிக்க சிறந்த பணியாக விளங்குகிறது. அதனால், ஆசிரியர்கள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களை ஆசியர்கள் கண்டிக்க வேண்டும். அதற்காக தண்டிக்கிறோம் எனக்கூறி ஆசிரியர்கள் தடியை எடுத்து மாணவர்களை மிரட்டுவது, அடிப்பது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக ஆசிரியர்களுடைய நடவடிக்கையால் மாணவர்கள் எதிர்காலம் திசைமாறவும் வாய்ப்புள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நெருங்கி பழகி அவர்களுக்கு சிறந்த கல்வியையும், நல்லொழுக்கத்தையும் போதித்து நல்வழிப்படுத்த வேண்டும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஏதோ திறமை மறைந்து கிடக்கும். அந்த திறமையை ஆசிரியர்கள்தான் மாணவர்களுக்கு உணர்த்தி அவற்றை வெளிக்கொண்டு வர வேண்டும். பெற்றோர்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.இயக்குனர் அரங்கநாதன் நன்றி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
நல்ல பகிர்வு .... ஆனால் 13 .5 மில்லியன் பேர் பட்டினியால் கல்வி இழந்துள்ளனர் ...
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
Post a Comment